Saturday, 31 January 2015

கண்ணாய் நானிருப்பேன்!

பாவை பார்வையாய் நானிருப்பேன் – என்றும்
பூவாய் காலடி பூத்திருப்பேன்
மனக்கண்ணில் காட்சிகள் காட்டுகிறேன் – உன்
கண்களுக்கும் உயிர் ஊட்டுகிறேன்

கானல் நீர்தான் வாழ்க்கை என்றால் – அங்கு
பார்வை என்பதும் தேவையில்லை
காற்றை பார்த்தவர் யாருமில்லை – இங்கு
கண்கள் காண தூரமில்லை

நம்போல் இங்கே கதிர்மதி இரண்டு
ஒன்றோடு ஒன்று உறவாய் உண்டு
வளைவில் புருவம் உன்னில் கண்டு
வளைந்தது அங்கே வானவில் இன்று
                                    (-பாவை)

ஆழ்கடல் ஆழம் உன்மனமே - அதில்
ஆயிரம் சிறகு முளைத்திடுமே
பெண்மையாய் பூக்களும் பூத்திடுமே - செஞ்
சோலையில் இன்பம் கூடிடுமே
                                    (-காற்றை)

நுனிப்புல்லில் இருக்கும் பனித்துளியும் – பிறை
நெற்றியில் முகிழ்ந்த வியர்வையடி
சிறகுகள் முளைத்த சிந்தனைபோல் – வான்
குடைக்குள் பறவைகள் பறக்குதடி
                                    (-கானல் 2வரி)
                                    (-பாவை 2வரி)

கோடிகள் உண்டு விந்தையடி – இன்று
உணர்ந்தாயா நான் சொன்னபடி?
தமிழே தந்தது சிந்தையடி – இங்கு
உன்போல் யாரும் இல்லையடி!

                                    (-பாவை 2வரி)

No comments:

Post a Comment