Saturday, 31 January 2015

புகழேந்தியின் வண்ணங்கள்

புரட்சிக் கவிதைகள் நெருப்பை உமிழ்வதுண்டு
       புகழேந்தியின் வண்ணங்கள் உணர்வாய் எரிவதுண்டு
சமூக அவலங்கள் யாவையும் படமாய்கண்டு
       சங்கடம் தீர்க்க சங்கரனாய் எழுவாருமுண்டு
கொங்கையை அறுத்த ஓவியம் கண்டு
       போர்முகமாய் வெடிக்கும் உள்ளம் பலதுண்டு
தென்னாப்பரிக்கம் பாலத்தீனம் எனநாடுகள் இரண்டு
       விடுதலைப்போர் கண்டு நின்றது உலகே மிரண்டு

செம்புரட்சி செய்தவன் தொடங்கி தமிழ்
       கவிபுரட்சி செய்த முன்னவரை சேர்த்து
கார்க்கி தாகூர் காந்தி ஐன்ஸ்டீனென
       வண்ணங்கள் உறங்காது மனதில் உறைந்துநிற்கும்
விடுதலை விடுதலை என்றே வீரம்காட்டிய
       அம்பேத்கர் பெரியார் நேதாஜி மாவோ
காஸ்ட்ரோ சேகுவேரா மண்டேலா யாசர்அராஃபட்
       ஓவியங்கள் உலகிற்கு உண்மைகள் எடுத்துரைக்கும்

வியட்னாமின் இன்னலை பேதை நிர்வாணம்
       சித்தரிக்கும்; வற்றிய மார்பினை சப்பிடும்
பிள்ளை பலர் நெஞ்சத்தை பதைபதைக்கும்
       ஏகாதிபத்திய நன்முகத் திரைக் கிழிக்கும்
வெலிக்கடை சிறையினில் பிதுங்கிய கண்கள்
       கண்ணோடு இன்றும் இடிமழை யாகும்
கொடுமைகள் மாற்றி கனிவினை காட்டிட
       தெரசாவின் சாயங்கள் நமக்குத் துணையாகும்

இயற்கையால் சிதைந்த கூடுகள் குஜராத்
       பேரழிவின் எச்சமாய் சாட்சி சொல்லும்
திசைமுகம் இருபத்து ஐந்தும் - எங்கள்
       அய்யாவின் அறிவாய் எத்திக்கும் மிண்ணும்
மதவெறி கொண்டே செய்த மட்டமுறு
       செயலெல்லாம் மனதில் பெருந்தீ மூட்டும்
கனன்று தனிந்தபின் மிஞ்சும் புகைமூட்டம்
       மொத்தத்தில் ஓவிங்கள் வாழ்வின் உயிர்ப்பு.

No comments:

Post a Comment